கந்த சஷ்டியில் சூரசம்ஹாரம் ஏன் தெரியுமா?












கந்த சஷ்டி விழா முருகன் ஆலயங்களில் களைகட்டியுள்ளது. பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கியுள்ளனர். சூரனை வேல் கொண்டு வதம் செய்த முருகனின் வெற்றியை போற்றும் விதமாக திருச்செந்தூரில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி அமாவாசைக்கு மறுதினம் பிரதமையில் விரதம் தொடங்கி ஆறு நாட்கள் அன்ன ஆகாரம் இன்றி விரதம் இருந்து முருகனை வணங்குகின்றனர். ஆறாம் நாள் சூரசம்ஹாரம் முடிந்து விரதம் முடிக்கும் பக்தர்கள் வெற்றிக்கு அடையாளமாக திருக்கல்யாணம் முடிந்து தங்கள் ஊர் திரும்புகின்றனர். காலம் காலமாக கொண்டாடப்படும் சூரசம்ஹாரத்தின் புராண கதையினை நாம் பார்க்கலாம்.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்த தோன்றிய அக்னியில் உருவானவர் ஆறுமுகப்பெருமான். சரவணப்பொய்கையில் இருந்த தாமரை மலர்களில் குழந்தைகளாக உருமாறி கார்த்திகைப் பெண்களின் கை பட்டு கந்தனாக வளர்ந்தார். அவரது அழகு அனைவரையும் கவர முருகன் ஆனார். முருகன் அவதாரமே சூரனை சம்ஹாரம் செய்வதற்காகத்தான் என்பதை உணர்த்துகிறது புராணம். சூரபத்மன் யார்? தேவர்களை எதிர்க்கும் அளவிற்கு தெம்பு எப்படி வந்தது? அவன் செய்த கொடுஞ்செயல்கள் என்ன சூரபத்மனை சுப்ரமணியர் எப்படி வதம் செய்து வெற்றி கொண்டார் என்று பார்க்கலாம்.



சூரபத்மனின் சகோதரர்கள்

கஷ்யப முனிவருக்கும், மாயைக்கும் பிறந்த பிள்ளைகள், சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். சூரபத்மனுக்கு அசுரமுகம். தாரகனுக்கு யானைமுகம். சிங்கமுகனுக்கு சிங்கமுகம். இவர்கள், குலகுருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று, சிவனை நோக்கித் தவமிருந்தனர். தவப்பயனாக 1008 அண்டங்களையும் ஆட்சிசெய்யும் வரம் பெற்றனர். சூரியன், சந்திரன், அக்னிதேவன், குபேரன் முதலிய தேவர்கள் அனைவரும், அசுரர்களின் பணியாளர்களாக மாறினர்.




சிவனின் நெருப்பு பொறிகள்

தேவர்கள் பிரம்மாவிடம் சென்று தங்கள் நிலையைச் சொல்லி வருந்தினர். சூரபத்மனை அழிக்க சிவனால் மட்டுமே முடியும். அதனால் அவரிடம் முறையிட்டால் விடுதலை கிடைக்கும் என்றார் பிரம்மா. தேவர்களும், கயிலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். அவருக்கு சத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம், அதோமுகம் ஆகிய ஆறு முகங்கள் உண்டு. அவற்றில் இருந்து. ஆறு நெருப்புப் பொறிகளை உண்டாக்கினார்.

சூரசம்ஹாரம்

அவை சரவணப்பொய்கையில் விழுந்து, குழந்தைகளாக மாறின. கார்த்திகை பெண்கள் வளர்க்க அவற்றை அன்னை பார்வதி ஒன்று சேர்த்த போது, கந்தன் ஆனார். அழகான அவர் முருகன் ஆனார். திருச்செந்தூரில் சூரபத்மனை போரிட்டு வென்று தேவர்களைக் காத்தார். ஐப்பசி மாதம் சஷ்டி திதியில் சூரசம்ஹாரம் நிகழ்ந்ததாக ஐதீகம். அதனால், கந்த சஷ்டியன்று முருகன் கோவில்கள் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

வேல் கொடுத்த பார்வதி

முருகப்பெருமானுக்கு அன்னை பார்வதி தன் சக்தி மிகுந்த வேலை கொடுக்க, சூரபத்மனுக்கு எதிரான போருக்கு புறப்பட்டார். திருச்செந்தூரில் தன் படை பாசறையை அமைத்தார். பார்வதி தேவியின் பாத சிலம்பில் இருந்து தோன்றிய நவசக்தியர்களிடம் இருந்து நவ வீரர்களான வீரபாகுதேவர், வீரகேசரி, வீர மகேந்திரர், வீர மகேசுவரர், வீர புரந்தரர், வீராக்கதர், வீர மார்த்தாண்டர், வீராந்தகர், வீர தீரர் மற்றும் லட்சம் வீரர்களும் தோன்றி முருகனின் படைத் தளபதிகளாக விளங்கினர். சூரபதுமனையும் அவனுடன் சேர்ந்த அசுரர்களையும் அழித்து தேவேந்திரனுக்கு பட்டாபிஷேகம் செய்து தர்மத்தை நிலைநாட்ட புறப்படுவாயாக என்று கந்தனுக்கு, சிவபெருமான் அன்பு கட்டளையிட்டார்.


தாரகாசூரன் சம்ஹாரம்

வெற்றி சங்கு முழங்கியது. மலர் மாரி பொழிந்தது. தேவசேனாபதியின் பெரும்படை செல்லும் வழியில் கிரவுஞ்சமலை எதிர்பட்டது. அம்மலைக்கு அதிபதியான சூரபத்மனின் தம்பியாகிய தாரகாசூரனை சம்ஹாரம் செய்து அவன் மார்பில் அணிந்திருந்த திருமாலின் சக்ராயுதமாகிய செம்பொன் பதக்கத்தை முருகன் பெற்றார்.

சூரபத்மன் மகன் பானுகோபன்

முருக பெருமானின் படைகள் ஆரவாரத்துடன் புறப்பட்டனர். சூரபத்மன் மகன் பானுகோபன் புறப்பட்டு வந்து முருக பெருமான் படையோடு போரிட்டு படுதோல்வி அடைந்து புறமுதுகு காட்டி ஓடினான். 3ஆம் நாள் போரில் பானுகோபன் கொல்லப்பட்டான். அடுத்து சிங்கமுகா சூரன் சிங்கமென சீறிப் பாய்ந்து போர்க்களம் வந்தான். ஆனால் முருகபெருமானின் வேல், சிங்கமுகாசூரனை சம்ஹாரம் செய்து அவனும் கொல்லப்பட்டான். அடுத்து சூரபத்மனின் தலைமை அமைச்சர் தருமகோபன், சூரபத்மன் மக்கள் மூவாயிரம் பேரும் கொல்லப்பட்டனர். முடிவில் எஞ்சி நின்றது சூரபதுமன் மட்டுமே.

சூரசம்ஹாரம்

பெரும் படையுடன் சூரபத்மன் போருக்கு வந்தான். மிக அற்புதமாக மாயப் போர் புரிந்தான். முருகனது வேலில் இருந்து தப்பிக்க மிருகங்கள், பறவைகள், மரங்கள் என மாறி மாறி மாயத்தால் தப்பினான். முருகனின் சக்தி வேல் திருச்செந்தூர் அருகே உள்ள மரப்பாடு என்ற மாந்தோப்பில் மாமரமாக மறைந்திருந்த சூரபத்மனை இருகூறாக பிளந்து சம்ஹாரம் செய்தது. சூரபதுமன் ஆணவம், அகங்காரம் ஒழிந்தது. இரண்டும் சேவலாகவும், மயிலாகவும் மாறி முருகப்பெருமான் கொடியாகவும் வாகனமாகவும் மாறியது.

புனித நீர் நாழிக்கிணறு

சூரனை சம்ஹாரம் செய்த முருகனது வேல் கங்கைக்கு சென்று நீரில் மூழ்கி தோஷம் நீங்கி மீண்டும் முருகனது கைகளில் வந்தது. அதை கடற்கரை ஓரத்தில் பூமியில் குத்த, உள்ளே இருந்து நீர் பீறிட்டு வெளிவந்தது. அந்த நீர்தான் நாழிக்கிணறு நீரானது. அந்த நீரையும், மணலையும் சேர்த்து சிவலிங்கம் செய்து முருகன் சிவபூஜை செய்தார். விண்ணும் மண்ணும் குளிர்ந்தது. தேவர்கள், முனிவர்கள் மலர் மாரி பொழிந்தனர்.

முருகன் தெய்வானை திருக்கல்யாணம்

தேவாதி தேவர்கள் புடைசூழ திருப்பரங்குன்றம் என்ற தலத்துக்கு முருக பெருமான் வந்தார். குன்றத்தில் தவம் செய்து வந்த ஆறு முனிவர்களுக்கு திருவருள் புரிந்தார். ஆறு முனிவர்களும் முருக பெருமானை தேவ தச்சனால் நிர்மாணிக்கப்பட்ட பொன் வண்ண கோவிலினுள் எழுந்தருள செய்தனர். தேவேந்திரன் தன் மகளாகிய தெய்வானையை மணம் முடிக்க விரும்பினார். திருப்பரங்குன்றத்திலே மங்கள மண நாள் அன்று ஈரேழு பதினான்கு லோகங்களும் வியக்கும் வண்ணம் இந்திரனும் அவன் மனைவி இந்திராணியுடன் தெய்வானையின் கை பிடித்து முருகனிடம் ஒப்படைத்தனர். திருமணம் அதி அற்புதமாக நடந்தேறியது. சிவபெருமான்- பார்வதிதேவியை முருகன்-தெய்வானை மூன்று முறை சுற்றி வந்து வழிபட்டனர். பின் நால்வரும் திருமணத்துக்கு வந்த அனைவரையும் ஆசீர்வதித்தனர்.















Latest
Previous
Next Post »