முருகா என்றால்


இப்பிரபஞ்சத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டதே! ஆனால் முருகப்பெருமான் மட்டுமே பரிணாம வளர்ச்சிக்கு உட்படாதவன். பரிணாம வளர்ச்சிக்கு உட்படாத முருகப்பெருமானின் திருவடியைப் பற்றி ஆசி பெற்ற அகத்தியர் முதல் வழிவழி வந்திட்ட நவகோடி சித்தரிஷி கணங்களும் முருகன் அருளால் பரிணாம வளர்ச்சியிலிருந்து விடுபட்டு முற்றுப்பெற்ற ஞானிகளானார்கள் என்ற பேருண்மையை உணரலாம். அவர்களைப்போல நாமும் பரிணாம வளர்ச்சிக்கு ஆளாகாது அதனின்று விடுபட்டு முற்றுப்பெற்ற ஞானிகளாகிட முருகன் திருவடியை பற்றினாலன்றி முடியாது என்பதையும் உணரலாம். ஆதலின் பரிணாம வளர்ச்சியினின்று விடுபட முருகன் அருள் பெறுதல் அவசியம் என்று உணர்த்தப்படும்.

அவர்களெல்லாம் முருகன் அருள் பெற வேண்டுமெனில் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சைவஉணவை மேற்கொண்டு பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் காலை மாலை ஓம் முருகா என்றோ ஓம் சரவண பவ என்றோ முருகனின் திருநாமங்களை தவறாது பயபக்தியுடன் சொல்லி வருவதுமாய் இருந்திட இருந்திட நாமத்தின் பலன்கூடி உண்மை அறிவுமிகும்.

மேல்மேலும் ஜீவதயவினை தொடர்ந்து செய்து செய்து முருகனின் நாமங்களை சொல்லி சொல்லி நாத்தழும்பேறும் வரையும் மனமுருகி சொல்ல சொல்ல பரிணாம வளர்ச்சியின் பாதையினின்று விடுபடும் மார்க்கம் முருகனருளால் புலப்படும். புலப்படும் பாதையில் முருகன் திருவடித்துணையுடன் சென்றுமே ஞானிகள் சூழ பாதுகாப்பாய் சென்றுமே பரிணாம வளர்ச்சியிலிருந்து விடுபடலாம்.

முருகா ஞானபண்டிதா! ஞானத்தலைவா! செந்தில்நாதா! சிங்காரவேலா! தணிகைநாதா! தணிகாசலனே! அசுரர் கிளை முடித்த அமராபதி காவலனே! தேவசேனாபதியே! குன்றமர்ந்த வேலா! குமாரக் கடவுளே! குகனே! சுவாமிநாதா! செங்கோட்டு வேலவனே! பழனிநாதா! என்றே முருகனின் நாமங்களை விடாது செபிப்போம். அவன் புகழ் பாடுவோம் நாமம் சொல்லுவோம்.
முருகன் பெருமையை பரப்புவோம் முருகன் அருள் பெறுவோம் மீளஇயலா பரிணாமத்தினின்று மீண்டு வெற்றி பெறுவோம்.

சொல்லுங்கள் முருகனின் நாமத்தை!
செல்லுங்கள் முற்றுப்பெறும் நிலை நோக்கி!!

Previous
Next Post »